29/07/2020
கட்டிட விரிசல்கள் ஏற்பட இந்த 8 விதமான பாதிப்புகள் தான் காரணம்
தற்போதைய அவசரமான காலகட்டத்தில் எல்லோரும் சரியான கட்டுமான தொழில்நுட்ப ஆலோசனை பெற்ற பின்புதான் வீடு கட்டும் வேலையை ஆரம்பிக்கிறோமோ என்றால் அது நிச்சயமாக இல்லை!..
வேலையாட்களின் அவசர மனநிலை, வேலை பற்றிய முன் அனுபவம் இல்லாதது, தொழில்நுட்ப அறிவு பெறாதது ஆகிய மனித குறைபாடுகளால் கட்டிடம் விரிசல் விட காரணமாக உள்ளன.
கட்டிட விரிசல்கள் வருவதற்கு என்ன காரணம்?
1. சுவர்கள் கட்டமைக்கப்பட்ட பிறகு அவை இறுகுவதற்கு ஊற்றப்படும் தண்ணீர் உப்புத்தன்மை இன்றி இருப்பது அவசியம், நீரில் கலந்துள்ள உப்பு சிமெண்டுடன் வேதிவினைக்கு உள்ளாகி பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் சுத்தமான தண்ணீரை ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.
2.சுவர்களுக்கு தண்ணீர் போதுமான அளவு ஊற்றியிருக்க வேண்டும் . தண்ணீர் அளவு குறைவாகிவிட்டாலும் விரிசல் ஏற்பட்டுவிடும், வேலையாட்கள் தவிர மற்றவர்களும் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
3. சிமெண்ட் மணல் கலவையானது நீர் விடுவதற்கு முன்பும், நீர் விட்ட பின்பும் நன்றாக கலக்கப்பட வேண்டும். சிமெண்டு மணல் கலவையானது சரியாக இருக்க வேண்டும்.
4. விரிசலுக்கு சுற்றுப்புற வெப்ப நிலை மாற்றமும் ஒரு காரணமாக உள்ளது. வெயில் காலம், மழை அல்லது பனி மூட்டம் இருக்கும் காலங்களில் அமைக்கப்படும் சுவர்கள், கான்கிரீட் அமைப்புகளை கூடுதலாக கவனிக்க வேன்டும் . காரணம் அவற்றின் ' செட் ' ஆகும் தன்மை அதற்கு தகுந்த மாதிரி வேறுபடும்.
5. பழைய கட்டிடத்தோடு புதிய கட்டிடத்தை இணைக்கும்போது தகுந்த பாண்டிங் கெமிக்கல் ' உதவியுடன் இணைக்க வேண்டும் . சாதாரண சிமெண்டு வகை பூச்சுகள் அதற்கு பொருந்தாது.
6. கட்டிடத்தில் உண்டாகும் பில்டிங் ஜாயிண்ட் எக்ஸ்பான்ஸன் ' காரணமாகவும் விரிசல் வரலாம், அவற்றை உடனே தக்க ' கெமிக்கல் ' கலவை கொண்டு சரி செய்து விட வேண்டும்.
7. கான்கிரீட் கம்பிகள் நீர்க்கசிவு பிரச்சினையால் துரு பிடிப்பதால் அதனாலும் விரிசல்கள் வரலாம், கம்பிகள் கட்டும்போதே அதற்கான ' ரஸ்ட் புரூப் ' முறைகளை கையாள வேண்டும்.
8. சிமெண்டில் சரியான கிரேடை பயன்படுத்தாமல் விட்டால் விரிசல்கள் வரும், சிமெண்டு விலையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் நல்ல கிரேடு சிமெண்டா ? என்பதையும் கருத்தில் கொள்வது முக்கியம்.
Er Andrews