06/01/2026
🌏திருக்குடந்தை திருத்தலத்தில் வில்லேந்திய கோலத்தில் சாரங்கபாணி’
🙏இருகரம் கூப்பி, வாய் அவன் புகழ்பாட, கண் அவன் திருஉருவைக் காண, செவி (காது)யில் அவன் அவதாரத்தைச் சொல்லும் பாசுரங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பர். ஏனென்றால் ‘நாக்கொண்டு மானிடம் பாடேன்’ எனச் சொன்னவர் திருமழிசை ஆழ்வார். புவி என யாதுமாகி நின்ற மாயனை மீண்டும் மீண்டும் கவிப்பொருளாக்கிக் கைகூப்பி வணங்குகின்றார். வீடுபேறு அடையும் வழி அறியாது உடலை வருத்தி, எலும்புக்கூடு போலத் தோற்றம் உருவாகும்படி தவம் புரிந்து வாழவேண்டாம். வீடுபேற்றைக் கொடுக்க வல்லவன், வேத முதற் பொருளான நாராயணன் தான்
🙏பக்தியுடன் ...மாங்காடு மணிவண்ணன் பலராமன் அரும்பாக்கம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் ..... 🙏
#திருகுடந்தை
திருகுடந்தை என்ற பெயர் வந்ததற்கு காரணம் பிரம்மா உலகத்தை படைக்க எண்ணி, இமயமலையில் ஒரு குடத்தில் வித்துக்களை அடைத்து வைத்திருந்தாராம். அந்த குடமானது கங்கை நீருடன் மிதந்து,மிதந்து யமுனை போன்ற நதிகளை எல்லாம் கடந்து இறுதியில் கும்பகோணம் வந்தடைந்தது. அங்கே குடமானது சரிந்து அதில் இருக்கும் விதைகள் எல்லாம் வெளியேறி அங்கிருந்து பிரம்மா தனது படைப்பை ஆரம்பித்ததாகவும் அதனால் அவ்விடத்திற்கு திரு குடந்தை என்ற பெயர் வந்தது என்று புராணங்கள் கூறுகின்றன
#தல வரலாறு
⭐முனிவர்கள் அனைவரும் இயற்றிய மிகப் பெரிய யாகத்தின் பயனை மும்மூர்த்திகளில் யாருக்கு அளிப்பது என்று முனிவர்களுக்கிடையே யோசனை எழுந்தது. அத்தகைய தகுதியுடையவர் யார் என்பதை அறிந்து வர அவர்கள் தங்கள் பிரதிநிதியாக பிருகு முனிவரை அனுப்பி வைத்தார்கள். அவர் முதலில் சத்தியலோகம் சென்றார், பிரம்மனை சந்திக்க விரும்பிய அவரது விருப்பம் ஈடேறவேயில்லை. காரணம் பிரம்மன் உட்பட யாருமே அவரை மதிக்கவில்லை; வரவேற்கவும் இல்லை. அவரவர் தத்தமது சுகபோகங்களில் திளைத்திருந்தார்கள்; பிருகு என்ற இடையூறை அவர்கள் விரும்பவில்லை. சினம் கொண்ட முனிவர், விருட்டென்று அங்கிருந்து புறப்பட்டார். நேராக கயிலாயம் சென்றார். அங்கும் ஏகாந்த நிலையில் இருந்த ஈசன் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சினம் கூடியது. மூன்றாவதாக பாற்கடல் சென்றார். அங்கே திருமகள் கால்பிடித்துவிட, சுகமாக சயனித்திருந்த திருமாலும் முனிவரை கவனிக்கவில்லை. ஏற்கெனவே ஏறியிருந்த சினச் சுமை இந்தக் காட்சியைக் கண்டதும் இன்னும் அதிகமாயிற்று. எல்லா கோபத்தையும் சேர்த்து மொத்தமாகத் திருமாலின் மீது பிரயோகித்தார். தன் காலால் திருமாலின் மார்பில் உதைத்தார்.
🔥திடுக்கிட்ட மஹாவிஷ்ணு, பிருகு முனிவரின் கோபத்தை உணர்ந்து அவர் உதைக்கும் அளவுக்கு அவரை சினம் கொள்ள வைத்துவிட்டோமே என்று வருந்தி, அவரது காலைப் பிடித்து, ‘என்னை உதைத்ததால் தங்கள் பாதம் வலித்திருக்குமே,’ என்று சொன்னபடி வருடிவிட்டார். அவரை கவனிக்காத தன் பிழையைப் பொறுத்தருளும்படி கனிவுடன் கேட்டுக்கொண்டார். அந்தக் கனிவால் முனிவர் கூனிக்குறுகிப் போனார். இந்த கருணை சீலனை எவ்வளவு மோசமாக அவமதித்துவிட்டோம் என்று பெரிதும் வருந்தினார். கூடவே, இப்படி பொறுமை காத்த இந்த நாராயண மூர்த்தியே யாகப் பயனைப் பெறத் தகுதியானவர் என்று தேர்வும் செய்தார். அதன்படி வேள்விப் பலன்கள் எல்லாம் திருமாலையே சேர்ந்தன. ஆனால், திருமகளுக்கு, தன் நாயகன் பிருகு முனிவரை மன்னித்ததோடு, அவர் கால்களையும் இதமாக வருடிவிட்ட செயலும் பெரிய மனத்தாங்கலைக் கொடுத்துவிட்டது. அவர் உதைத்த இடம், தான் நிரந்தரமாக வசிக்கும் திருமார்பு அல்லவா? உடனே முனிவரை சினந்து தண்டிக்காமல், அவரை மன்னித்து, தான் பிழை செய்த தாகவும் ஒப்புக்கொள்கிறாரே, இது மஹாலட்சுமியாகிய தன்னைப் பெரிதும் அவமானப்படுத்துவதாக அல்லவா உள்ளது! இப்படி பிறருக்காகத் தன்னை விட்டுக் கொடுக்கும் இவருடன் எப்படி தொடர்ந்து வாழ்வது என்று சலித்துக் கொண்ட திருமகள் அவரைப் பிரிந்து பூலோகத்தில் கோல்ஹாப்பூர் என்ற தலத்துக்கு வந்தாள்.
😡தன் அகங்காரத்தால், நாராயணனையே அவமதித்துவிட்ட தன் இழிசெயலால் பெரிதும் வெட்கமுற்ற பிருகு முனிவர், அதனால், திருமகள், திருமாலைவிட்டுப் பிரிந்தது கண்டு வருத்தமுற்றார். இதற்குப் பிராயசித்தமாக, இனி வரும் பிறவியில் தன் மகளாக மஹாலட்சுமி பிறக்க வேண்டும் என்றும், அவளை திருமால் மணந்து தன்னுடன் மருமகனாக உறவு கொள்ள வேண்டும் என்றும் வரம் பெற கடுந்தவத்தை மேற்கொண்டார். தன்னை விட்டு திருமகள் பிரிந்ததால் பெரிதும் வாட்டமுற்ற திருமால் பூலோகத்துக்கு அவளைத் தேடுவதற்காக இறங்கி வந்தார். திருவேங்கட மலையில் ஒரு வேடுவனாக ஸ்ரீநிவாசன் என்ற பெயர் கொண்டு தன் மனதுக்கினியாளை அவர் தேடி வந்தபோது பத்மாவதியை சந்தித்தார். இந்த பத்மாவதியும், மஹாலட்சுமியின் ஓர் அம்சமே. அவளுடைய முந்தைய பிறவியில், அதாவது தன் ராமாவதார காலத்தில் அவள் வேதவதியாகத் திகழ்ந்தவள். தன்னை மணக்க விரும்பிய அவளிடம், ‘இப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என்று ராமன் கூறிவிட்டதால், அடுத்த பிறவியிலாவது தன் எண்ணம் ஈடேறுமா என்று ஏக்கம் கொண்டிருந்தாள் வேதவதி. அதனால் அவளே பத்மாவதியாகப் பிறந்து திருமாலுக்காகக் காத்திருக்க, ஸ்ரீநிவாசனாக வந்த அவர், அவள் விருப்பத்தை நிறைவேற்றினார்.
🌹இதற்கிடையில் நாரதர் மூலமாக மஹாவிஷ்ணு பூமிக்கு வந்ததையும், ஸ்ரீநிவாசராக பத்மாவதியை மணந்து கொண்டதையும் அறிந்த திருமகளின் சினம் இன்னும் அதிகமாயிற்று. உடனே கோல்ஹாப்பூரிலிருந்து புறப்பட்டு சீற்றத்துடன் திருமலைக்கு வந்தாள். மீண்டும் அவளை கோபத்துக் குள்ளாக்கி விட்டோமே என்று வருந்திய பெருமாள், அவள் சினத்துக்கு அஞ்சி அங்கிருந்து கும்பகோணத்துக்கு ஓடோடி வந்தார். அங்கே ஒரு பாதாளக் குகையில் ஒளிந்துகொண்டார்.
🌹இப்போதும் குடந்தை சார்ங்கபாணி கோயிலில் பாதாள ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் பூமிக்கு அடியில் ஒரு சந்நதியில் சேவை சாதிக்கிறார் பெருமாள். சில படிகள் இறங்கிச் சென்றுதான் இவரை தரிசிக்க முடியும். பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களில்தான் அந்த சந்நதியை தரிசனத்துக்காகத் திறந்து வைப்பார்கள் என்று கோயிலில் குறிப்பிட்டார்கள்.
🌹தேடி வந்த நாயகன் காணாமல் ஒளியவே, துயரம் கொண்டாள் தேவி. இனி அவனைக் காண வேண்டுமானால் அது கடுந் தவத்தால் மட்டுமே இயலும் என்பதை உணர்ந்து அவ்வாறே தவம் மேற்கொண்டாள். அதுவும் எப்படி? ஒரு தடாகத்தில், ஒரு தாமரை மலரில் சிறு குழந்தையாக உருமாறி! அப்போது அங்கே குடிலமைத்து இறைப்பணி ஆற்றிய பிருகு முனிவர் அந்தக் குழந்தையைப் பார்த்து, பெருமகிழ்வு கொண்டு தன் மகளாக எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். தாமரையில் தோன்றியவள் என்பதால் கோமளவல்லி என்று பெயருடன் அவள் பொலிவுடன் திகழ்ந்தாள். இந்த சம்பவங்களை இப்படியே விட்டுவிட்டு, மீண்டும் ராமாவதார காலத்துக்குச் செல்வோம். பட்டாபிராமனாக அயோத்தியே அகமகிழ முடிசூட்டிக்கொண்ட ராமன், தன்னுடைய இந்த சந்தோஷத்துக்குக் காரணமான அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். அந்த வகையில் விபீஷணனுக்கு தன் இக்ஷ்வாகு வம்சத்தவரால் வழிவழியாக வழிபடப்பட்டுவந்த ஆராதன விக்ரகத்தை அளித்தார்.
🌹ப்ரணவாக்ருதி மற்றும் வைதிக விமானங்களைக் கொண்ட அந்த அர்ச்சா மூர்த்தியை விபீஷணன் இலங்கைக்குப் பேருவகையுடன் கொண்டு சென்றான். ஆனால் வழியில் ஸ்ரீரங்கத்தில் ப்ரணவாக்ருதி விமானத்துடன் அரங்கன் அங்கேயே தான் தங்கிவிடும் விருப்பத்தை விபீஷணனுக்குச் தெரிவித்து, தன்னை அவன் ஆண்டுக்கு ஒருமுறை வந்து வழிபட்டுச் செல்லலாம் என்று தெரிவித்துவிட்டார். விபீஷணன் திகைத்து நிற்க, வைதிக விமானத்துடன் தான் குடந்தையில் அர்ச்சாவதார ரூபியாக சேவை சாதிக்கப் போவதாகவும், தன் திருமகளை அங்கே மணம் புரிய விருப்புதாகவும் தெரிவித்தார். அதேபோல குடந்தையில், வில்லெந்திய கோலத்தில் கோயில் கொண்ட அவர், கோமளவல்லியாக அவதரித்திருந்த மஹாலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டு அனைவரது விருப்பங்களையும் பூர்த்தி செய்தார். அப்படி மகிழ்ந்தவர்களில் பிருகு முனிவர் முக்கியமானவர். தான் அவமதித்ததையும் பொருட்படுத்தாமல் தன் பாதங்களைத் தன் திருக்கரங்களால் வருடி ‘தான் நாண நன்னயம் செய்த’ பெருமாளே தனக்கு மருமகனாகவும் மாறிய தெய்வானுக்ரகத்துக்கு உள்ளம் நெகிழ நன்றி சொன்னார் அவர். தன்மீது கோபமுற்ற திருமகளே தனக்கு மகளாக அமைந்ததும் அவர் மனதை நிறைவித்தது.
🌺கோமளவல்லியை மணம் புரிந்துகொண்ட தாலேயே இத்தலம் கல்யாணபுரி என்றும் வழங்கப்பட்டது. கோமளவல்லி அவதரித்த ஹேமபுஷ்கரிணியில் இன்றளவும் நடத்தப்படும் மாசி மாத தெப்போற்சவம் மிகவும் பிரபலமானது. ஸ்ரீரங்கம், பெருமாளின் பெருமைக்குரிய க்ஷேத்திரம் என்றால், திருக்குடந்தை அவரது பேரழகைப் போற்றும் திருத்தலம் என்பார்கள். காவிரியும் கொள்ளிடமும், ஸ்ரீரங்கனை அரவணைத்துச் செல்வதுபோல, குடந்தை சார்ங்கராஜாவையும் காவிரியும், அரசலாறும் தழுவிச் செல்கின்றன.
🌺தாயாரை மணந்து கொள்ள இத்தலத்துக்கு சுவாமி தேரில் வந்ததால், சுவாமியின் சந்நிதி தேர் அமைப்பில் உள்ளது.
🌏பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இக்கோயில் கருவறையில் கோமளவல்லி தாயார் மற்றும் மகாலட்சுமியுடன் சாரங்கபாணி பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மதேவர், தலைப் பகுதியில் சூரிய பகவான் உள்ளனர். கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார்.
🌙உற்சவர் நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் (வில்), உடைவாள் ஆகிய ஐந்து ஆயுதங்களுடன், வலது கரம் அபயமளிக்கும் முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.
🌏திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் 11 ஆழ்வார்களாலும், திருப்பதி 10 ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு 7 ஆழ்வார்களால் (பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார்) இத்தலமே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
திருமால் பலவிதமான சயனங்களில் பள்ளி கொண்ட தலங்கள் உள்ளன. இத்தலத்தில் திருமாள் உத்தான சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். முழுமையாக பள்ளிகொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை ‘உத்தான சயனம்’ என்பர்.
☀பெருமாளே, ஏன் படுத்திருக்கிறீர்கள்? வராஹ அவதாரம் மேற்கொண்டு, பாதாள லோகம் சென்று பூமித் தாயை மீட்டுத் தாங்கி வந்தீர்களே, அந்தக் களைப்பா? ராமாவதாரம் எடுத்து, காடு, மலை, மேடுகளிலெல்லாம் நடந்து, நடந்து கால்கள் நோவுற்றனவோ என் ஐயனே, அதனால்தான் சயனித்திருக்கிறீர்களா? எழுந்திருங்கள் சுவாமி, பதில் கூறுங்கள்,’’ என்று மிகுந்த பரிவுடன் கேட்கிறார். ஆனால் அவருக்கு பதிலளிக்க பெருமாள் எழுந்திருக்க யத்தனித்தபோது, ஆழ்வாருக்கு மனசு பதறிப் போகிறது. ‘அடடா, ஓய்வாக சயனித்திருக்கும் என் தலைவனை எழுப்பிவிட்டேனே,’ என்று தன்னையே கடிந்து கொள்கிறார். உடனே, ‘வாழி கேசனே, அப்படியே படுத்திரும்’ என்று சொல்லி, அவரை மீண்டும் ஓய்வு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். இப்படி ஆழ்வாருக்கு பதில் சொல்ல எழ முனைந்த திருக்கோலம்தான் இப்போது நாம் தரிசிப்பது. இதனாலேயே ஆழ்வார் அனுமதித்திட, பெருமானும் சிறிது எழுந்த நிலையில் சயனத் திருக்கோலத்தில் காணப்படுகிறார். இப்படி இவரை எழச்சொன்ன ஆழ்வாருக்கு ‘திருமழிசைப்பிரான்’ எனத் திருநாமம் ஏற்பட்டது.
🌙இந்தக் கோயிலில் கர்ப்பக் கிரகம் வித்தியாசமானது. ஒரே கல்லால் ஆனது. அதுவும் ஒரு தேர் வடிவத்தில், யானையும், குதிரையும் இழுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்குள் பெருமாளை தரிசிக்க, ஆடி மாதம் முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகத்தான் செல்ல வேண்டும். இது தட்சிணாயன தேவதையின் வேண்டுகோள் என்றும் அதனை மதிக்கும் வகையில் ஆராவமுதன் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்தான் என்றும் சொல்கிறார்கள். அதேபோல தை முதல் ஆனி முடிய தட்சிணாயன வாசல் வழியாகச் சென்றுதான் மூலவரை தரிசிக்க முடியும். அதனால், கர்ப்பக் கிரகத்துக்கு இருபுறங்களிலும் இவ்விரு வாசல்கள் உள்ளன. பெருமாள் எழுந்தருள்வதும், அந்தந்த மாதங்களில் அந்தந்த வாசல் வழியாகத்தான்.இந்தக் கருவறை அமைப்புக்கு ஏற்றாற்போல திருமங்கையாழ்வார் ஒரு சிறப்பு செய்திருக்கிறார். இது வேறு எந்த திவ்ய தேசத்துக்கும் இல்லாத பெருமை என்றே சொல்லலாம். அதாவது தேர் வடிவில் அமைத்த திருவெழுக்கூற்றிருக்கை என்ற பிரபந்தத்தால் அவர் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
தாயாரின் அவதாரத் தலம் என்பதால் இக்கோயிலில் தாயாரே பிரதானமாக கருதப்படுகிறார். நடை திறக்கப்படும்போது, தாயார் சந்நிதியில் கோமாதா பூஜை செய்யப்பட்ட பிறகே, சுவாமி (குடந்தைக் கிடந்தான்) சந்நிதியில் நடத்தப்படுகிறது.
🌹லட்சுமி நாராயணசாமி என்ற பக்தர், தனது இறுதிக்காலம் வரை இக்கோயிலுக்கு சேவை புரிந்தார். இக்கோயிலின் கோபுரத்தைக் கட்டியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஒரு தீபாவளி தினத்தில் இவர் பெருமாளின் திருவடியை அடைந்தார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால், பெருமாளே அவருக்கு மகனாக இருந்து இறுதிச் சடங்குகள் செய்தார். இன்றும் சாரங்கபாணி பெருமாள், பக்தருக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
🌹பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், “சார்ங்கபாணி’ என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.
🌏இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது. (இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன சிலதை மட்டுமே பதிவிட்டிருக்கின்றேன் நன்றி)
மூலவர் : சாரங்கபாணி, ஆராவமுதன்
தாயார் : கோமளவல்லி
தீர்த்தம் : ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு
புராண பெயர் : திருக்குடந்தை
ஊர் : கும்பகோணம்
மாவட்டம் : தஞ்சாவூர்