02/08/2024
#கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதியில்லாததால் புதிய சுகாதார வளாகம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ,மாணவிகள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். 1967ம் ஆண்டு துவங்கப்பட்ட கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடலாடி, சாத்தங்குடி, மீனங்குடி, சமத்துவபுரம், ஆப்பனூர், ஆ.புனவாசல், மாரந்தை, ஓரிவயல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 650க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் 5க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் இருந்தன.
ஆனால் கழிப்பறை கட்டிடம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டதால் கட்டிடங்கள், கோப்பைகள் சேதமடைந்தது. இதனால் 4 கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. ஒரே ஒரு கழிப்பறை மட்டும் உள்ளது. அதனை மாணவிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கழிப்பறை இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். மாணவிகள் முறையான கழிப்பறை வசதியின்றி, வெளியில் செல்ல முடியாமல் பள்ளிக்கு வரும் காலை முதல் வீட்டிற்கு திரும்பி செல்லும் மாலை வரை கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். பள்ளி துவங்கப்பட்டு 57 வருடங்களாகியும் உரிய கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகள் இன்றி, எவ்வித முன்னேற்றம் இல்லாமல் இருப்பதால், சுற்றுவட்டார கிராமமக்கள் மக்கள் மாணவர்களை வேன் வசதியுள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
இதனால் இந்த பள்ளியில் ஆண்டுக்காண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவ,மாணவிகள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, கடலாடி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை உள்ளது. அதுவும் சேதமடைந்தும், சுகாதார மற்றும் இருப்பதால் மாணவிகள் உள்ளே கூட செல்ல முடியாமல், பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவதாக கூறுகின்றனர். இதனால் வீட்டிலிருந்து பள்ளி சென்று விட்டு வீடு திரும்பி வரும் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாணவிகளின் நலன் கருதி விரைவாக சுகாதார வளாகம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் Ramanathapuram Collector நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் இணைந்து முறையாக சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்து வருகின்றனர். விடிவு காலம் வருமா !!!